கணவர் வீட்டினர் அடித்து துன்புறுத்தல்: மனமுடைந்த புதுப்பெண் விபரீதம்

கணவர் வீட்டினர் அடித்து துன்புறுத்தியதில் மனமுடைந்த புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை வீதியை சேர்ந்தவர் மாணிக்கம், 50; பெயின்டர். இவருக்கு, மகள் சகுந்தலா தேவி, 22, மூன்று மகன்கள் உள்ளனர். ஆட்டையாம்பட்டி, எஸ்.பாலத்தை சேர்ந்த, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவர் ராஜேந்திரன். இவரது மகன் தினேஷ்ராம், 20. தனியார் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படிக்கிறார். சகுந்தலாதேவி, தினேஷ்ராம் காதலித்து, ஒரு மாதத்துக்கு முன், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டனர்.
இருதரப்பினர் கொடுத்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்ததில், தினேஷ்ராமுக்கு, 20 வயதே ஆனது தெரிந்தது. இதனால், சட்டப்படி திருமணம் செய்ய முடியாததால், சகுந்தலாதேவியை, பெற்றோருடன் அனுப்பினர். 10 நாளுக்கு முன், இந்த ஜோடி மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியது. நேற்று, தினேஷ்ராமின் பெற்றோர், சகுந்தலாதேவியை அடித்து துன்புறுத்தி, வெற்று தாள்களில் கைரேகை பெற்றுக்கொண்டு, அவரது வீடு அருகே விட்டுச்சென்றனர்.
பெற்றோர் வீட்டுக்கு வந்த சகுந்தலாதேவி, யாரிடமும் பேசவில்லை. வீட்டுக்கு வெளியே பெற்றோர், சகோதரர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், கதவை உட்புறமாக பூட்டிக்கொண்ட சகுந்தலாதேவி, தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.