முதல் நாளிலேயே ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!!

தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கிய நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் இன்று தொடங்க உள்ள கூட்டத் தொடர் செப்டம்பர் 16ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்போதைய கூட்டத் தொடர் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் மூன்றாம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் துவங்கியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் முகக்கவசம் அணிந்து பேரவையில் பங்கேற்றனர். பேரவைத் தொடங்கியதும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்எல்ஏ ஜெ.அன்பழகன், எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் கரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தை பேரவைத் தலைவர் தனபால் நாளைக்கு ஒத்திவைத்தார்.
நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரும் வாசகம் அடங்கிய முகக்கவசத்தை அணிந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பேரவைக் கூடடத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.