மாரிதாஸ் மீது, காவல் ஆணையரிடம் நியூஸ்18 புகார் !

யூடியூபர் மாரிதாஸ் என்பவர் மீது, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி மிரட்டும் வகையில் ஃபோர்ஜரி வேலைகளில் ஈடுபட்டதாக கூறி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நியூஸ்18 நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற, தமிழ்நாடு யங் திங்கர்ஸ் ஃபாரம் (Tamil Nadu Young Thinkers Forum) பணியாற்றிக்கொண்டிருப்பவர் மானாமதுரையை அடுத்த திருப்புவனத்தை சேர்ந்த மாரிதாஸ். சர்ச்சையாக பேசினால், இலகுவாக கவனத்தை ஈர்க்கலாம் என்ற விதியைப் பின்பற்றி, பல வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வருகின்றார். குறிப்பாக, மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி, ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.
இந்த நிலையில், ‘தி.மு.க.+ தி.க.+ செய்தி நிறுவனங்கள், நடுநிலை இந்துக்கள் இளிச்சவாயன்களா?’என்று சமீபத்தில் இவர் போட்ட வீடியோ பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், மத்திய அரசின் சிறந்த பத்திரிகையாளர் விருது வாங்கிய பிரபல நியூஸ்18 சேனல் குணசேகரன், புதியதலைமுறை டி.வி. நெறியாளர் கார்த்திகைசெல்வன், நியூஸ் 7 நெறியாளர் நெல்சன், செந்தில் போன்றோரை ஒருமையில் பேசி, இந்துமத விரோத பத்திரிகையாளர்கள் என்று விமர்சித்தார். மேலும், இவர்களை உடனே பணிநீக்கம் செய்யக்கோரி, அந்தந்த செய்தி நிறுவன நிர்வாகத்தினருக்கு, கடிதம் எழுதுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து, இவருக்கு ஏராளமான கண்டனங்கள் எழுந்தன. அதை சமாளிக்கும் விதமாக, மாரிதாஸ் மற்றொரு வீடியோ போட்டார். அதில், “தனது கோரிக்கை உண்மை என்பதால்தான், நியூஸ் 18 நிர்வாகம் எனக்கு பதில் கடிதம் போட்டுள்ளது. விரைவிலேயே ஆசிரியர் குணசேகரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.” என்று ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார்.
இதை பலரும் உண்மை என்று நம்பிய நிலையில், அந்த கடிதத்தை மாரிதாஸே போலியாக தயாரித்து வெளியிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக, நியூஸ் 18 இணையதள செய்தி ஆசிரியர் வினய் சாரவாகி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘என்னுடைய பெயரில் உலவும் மெயில் போலியானது’ என்று தெரிவித்துள்ளளார்.
மேலும், நியூஸ் 18 சார்பில், சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் சட்ட ரீதியிலான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “நியூஸ் 18 நிர்வாகத்தின் பெயரால் பரப்பப்படும் கடிதம் போலியாது. மாரிதாஸ் யாரென்றே எங்களுக்கு தெரியாது. அவர் மீது அவதூறு பரப்புவது, போர்ஜரியாக கடிதம் தயாரித்து வெளியிட்டது, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி மத மிரட்டல் விடுப்பது, நல்லிணக்கத்தை குலைத்து சமூகத்தில் மோதலை உருவாக்குவது, இந்துக்களை பிற மதத்தினருக்கு எதிராகத் தூண்டிவிடுவது, நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது ஆகிய குற்றங்களின் கீழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கோரப்பட்டுள்ளது.