ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தான் இந்தியர்களுக்கு முதலில் கிடைக்கும்

உலகிலும், இந்தியாவிலும் பல்வேறு தடுப்பூசிகள் பரிசோதனையில் இருந்தாலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தான் இந்தியர்களுக்கு முதலில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் ரஷ்யா தனது முதல் தடுப்பூசியை அறிவித்து உற்பத்தியை தொடங்கிவிட்டது. இத்தடுப்பூசியின் மீது உலக நாடுகளுக்கு சந்தேகம் உள்ளது. இந்தியாவில் பாரத் பையோடெக் கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கி பரிசோதித்து வருகிறது. சைடஸ் கேடிலா நிறுவனமும் ஜிகோவ் டி என்ற தடுப்பூசியை உள்நாட்டில் பரிசோதிக்கிறது. இவ்விரு தடுப்பூசிகளும் 2ம் கட்ட பரிசோதனையில் உள்ளன.
இது தவிர ஆக்ஸ்போர்டு பல்கலை., – அஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியை சீரம் இந்தியா நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இந்நிறுவனத்திற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் நாட்களில் நாடு முழுவதும் 17 இடங்களில் சுமார் 1,600 பேருக்கு இத்தடுப்பூசியை பரிசோதிக்க உள்ளனர். அதன் பின்பு விதிமுறைகளை அனைத்தையும் இம்மருந்து பூர்த்தி செய்தால், இந்தாண்டு இறுதியில் இந்தியர்களுக்கு முதலில் கிடைக்கும் தடுப்பூசியாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அமையக் கூடும்.