2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா: பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில், 13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக, சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 8 அணிகளின் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடந்த வாரம் தனித்தனி விமானங்களில் புறப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, 1,988 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில், இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட வீரர்களுடன் தொடர்பிலிருந்த மற்ற வீரர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும், பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.