என்னை ஊடகங்கள் கிண்டலடித்தன… ஆறேழு மாதம் காத்திருங்கள்… கடுகடுத்த ராகுல்
“கொரோனா வைரஸ் காரணமாக பெரும் இழப்பு ஏற்படும் என்று நான் நாட்டை எச்சரித்தபோது ஊடகங்கள் என்னை கேலி செய்தன. ஆறேழு மாதத்தில் இந்திய இளைஞர்கள் பெருமளவு வேலையிழப்பை சந்திக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘இளைஞர்களுக்கு இந்தியா வேலைவாய்ப்பை வழங்காது. கொரோனா வைரஸ் காரணமாக பெரும் இழப்பு ஏற்படும் என்று நான் எச்சரித்தபோது ஊடகங்கள் என்னை கேலி செய்தன. இன்று சொல்கிறேன், நம் அரசால் வேலை கொடுக்க முடியாது. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஆறேழு மாதங்கள் காத்திருங்கள்.’ இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக சம்பளதாரர்களின் வேலையிழப்பு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சி.எம்.ஐ.இ., சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஊரடங்கினால் நான்கு மாதத்தில் 1.8 கோடி சம்பளதாரர்கள் வேலையிழந்ததாக கூறியிருந்தது. அதனை சுட்டிக்காட்டி டுவீட் செய்திருந்த ராகுல், ‘இரண்டு கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளது. பேஸ்புக்கில் போலி செய்திகளையும், வெறுப்பையும் பரப்பி வேலையின்மை மற்றும் பொருளாதாரத்தை அழிப்பது பற்றிய உண்மையை நாட்டினரிடம் மறைக்க முடியாது’ என கூறினார்.