அரசு கஜனாவிலிருந்து திருடியுள்ளனர் – ரபேல் விவகாரத்தை மீண்டும் கிளப்பிய ராகுல்!

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் ரபேல் ஒப்பந்த விவரம் பற்றிய தகவல் எதுவும் இடம்பெறாததால், அரசு கஜனாவிலிருந்து பணத்தை திருடியுள்ளனர் என ராகுல் குற்றம்சாட்டினார்.
பா.ஜ.க அரசு காங்கிரஸின் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன் புதிய ஒப்பந்தம் போட்டது. ரூ.59 ஆயிரம் கோடி செலவில் 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவது என தீர்மானிக்கப்பட்டது. தங்கள் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட விலை அதிகமாகவும் விமானங்கள் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதாக ராகுல் அப்போதே குற்றம்சாட்டினார்.
கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இவ்விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. தங்கள் அரசு கூடுதல் வசதிகளுடன் விமானங்களை வாங்குவதால் விலை அதிகம் என பா.ஜ.க., அரசு விளக்கமளித்தது. இந்நிலையில் சமீபத்திய டிவீட்டில் ராகுல் மீண்டும் ரபேல் விவகாரத்தை கையிலெடுத்து மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார்.
மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் ரபேல் ஒப்பந்த விவரங்களை விட்டுவிட்டதாக பத்திரிக்கை செய்தி வெளியானது. அதனை சுட்டிக்காட்டியுள்ள ராகுல், ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் அரசு கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளது. உண்மை ஒன்று, வழிகள் தான் பல என்ற மகாத்மா காந்தியின் வாசகத்துடன் இதனை குறிப்பிட்டுள்ளார்.