பாஜக கட்சியில் சேர காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்!!

காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபலை பாஜகவிற்கு வரவேற்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான ஆலோசனை நடந்தபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் ஆகிய இருவரும் ராகுல் காந்தியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க சொல்லும் நபர்களின் பின்னணியில் பாஜக இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதனால் ஆவேசமடைந்த குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல், ராகுல் காந்தியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தன்னுடைய பின்னணியில் பாஜக இருப்பதாக ராகுல்காந்தி நிரூபித்தால் தான் அரசியலைவிட்டு விலகுவதாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடுகளுடன் இருக்கும் குலாம்நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் ஆகிய இருவரும் பாஜகவுக்கு வரலாம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே என்று அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் சந்தித்த மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான அத்வாலே, “காங்கிரஸ் கட்சிக்காக குலாம் நபி ஆசாத்தும், கபில்சிபலும் அதிகமாக உழைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையை அக்கட்சி தரவில்லை. அக்கட்சியின் ராகுல் காந்தி அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். எனவே குலாம் நபி ஆசாத் மற்றும் கபில்சிபல் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு வர வேண்டும்” என்று ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.