“நேர்மையான வாடிக்கையாளர்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?” – வழக்கறிஞர் ராஜிவ் தத்தா

வங்கி கடன்களை மறுசீரமைப்பு செய்யும் மத்திய அரசு, நேர்மையான வாடிக்கையாளர்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்’ என, வங்கி கடன் விவகார வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதிடப்பட்டது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மார்ச், 25- முதல், பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. வங்கிகள், நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை வசூலிப்பதை, மார்ச் – மே வரை நிறுத்தி வைக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. பின், இந்த அவகாசம், ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், ஆறு தவணைகளும், கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், நிறுத்திவைப்பு காலத்துக்கு உரிய வட்டி கணக்கிடப்பட்டு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் என, வங்கிகள் அறிவித்தன.
‘கடனுக்கான மாதத் தவணையில், அசலுடன் வட்டியை மட்டும் தான், வங்கிகள் வசூலிக்கின்றன.நிறுத்தி வைக்கப்பட்ட, ஆறு மாத கடன் தவணைக்குரிய வட்டிக்கும் சேர்த்து, வட்டி வசூலித்தால், அது, வீட்டுக் கடன் போன்ற நீண்டகாலக் கடன் பெற்றவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையுமே தவிர, நிவாரணமாக அமையாது’ என கூறி. உ.பி., மாநிலம் ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உட்பட பலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் ராஜிவ் தத்தா கூறியதாவது:வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, பல சலுகைகளை அளித்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு எந்த நிவாரணமும் வந்து சேரவில்லை. வங்கி கடன்களை மறுசீரமைப்பு செய்வதாக, மத்திய அரசு தெரிவிக்கிறது. அதற்காக, நேர்மையான வாடிக்கையாளர்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்.இவ்வாறு, அவர் வாதிட்டார். இதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.–