ஆன்லைன் வகுப்பிற்காக தினமும் 5 கிலோ மீட்டர் நடக்கும் வனப்பகுதி மாணவர்கள்!

பர்லியாறு பகுதியில் செல்போன் டவர் இல்லாததால் வனப்பகுதியில் உள்ள குழந்தைகள் இன்டர்நெட் வசதிக்காக 5 கி.மீ பயணித்து சாலையோரத்தில் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருகின்றனர்.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான கோழிக்கரை,குரும்பாடி, பர்லியாறு, புதுக்காடு போன்ற அடர்ந்த வனப்பகுதி மத்தியில் பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியினரல்லாத மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் குன்னூர் அல்லது மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக இவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளது.
நகர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் ஆன்ட்ராய்டு போன், லேப்டாப் உதவியுடன் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் குன்னூர் சுற்று வட்டார அடர்ந்த வனப்பகுதியில் செல்போன் டவர் இல்லை. இதனால் இன்டர்நெட் வசதிக்கான நெட்வொர்க் இல்லை. இது இது மட்டுமின்றி சாதாரண செல்போன் கூட இல்லாத நிலையில், குழந்தைகள் ஆன்லலைனில் படிப்பதற்காக புது செல்போனை வாங்கினர்.
ஆனால் தங்கள் பகுதியில் செல்போன் டவர் இல்லாததால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பர்லியாறு பகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகள் தினமும் 5 கி.மீ தொலைவில் உள்ள பகுதிக்கு சென்று மொபைல் நெட்வொர்க் கிடைக்கும் சாலையோரத்தில் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகின்றனர். போக்குவரத்து வசதிகள் இல்லாததால் வரக்கூடிய வாகனங்களில் உதவி கேட்டு குழந்தைகள் சென்று வருகின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தங்கள் குழந்தைகளின் கல்வியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து இவர்களுக்கு கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பர்லியாறு மக்களின் கோரிக்கையாக உள்ளது.