ஆசியாவின் மிக உயரமான பெண் யானையான ‘கல்பனா’ மரணம்!

ஆசியாவிலேயே மிகவும் உயரமான பெண் யானையாக கருதப்படும் 41 வயதான கல்பனா யானை நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது.
கோவை மாவட்டம், கோழிகமுதி பகுதியில் அமைந்துள்ள டாப்சிலிப் யானைகள் வளா்ப்பு முகாமில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. டாப்சிலிப் வருபவா்கள் வனப் பகுதிக்குள் யானை சவாரி செய்வதை அதிகம் விரும்புவா். யானை சவாரிக்கு வரும் அனைவருக்கும் மிகவும் பிடித்த யானைகளில் ஒன்று தான் கல்பனா யானை.
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா மரணத்தின் தாக்கத்தால், தன்னுடைய வளர்ப்பு யானைக்கு கல்பனா என்று பாகன் பழனிசாமி பெயரிட்டார். ஆசியாவிலேயே மிகவும் உயரமான பெண் யானையாக கருதப்படும் 41 வயதான இந்த கல்பனா யானை சிறிய வயதில் சேத்துமடை அருகே பிடிக்கப்பட்டு முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த யானை கடந்த சில வாரங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கோவையில் இருந்து வனக் கால்நடை மருத்துவா்கள் வந்து யானைக்கு சிகிச்சை அளித்ததாகவும், சிகிச்சை பலனின்றி கல்பனா யானை நேற்று உயிரிழந்ததாகவும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். யானையின் உடலுக்கு உலாந்தி வனச் சரக அலுவலா் சக்திவேல் தலைமையிலான வனத் துறையினா், பாகன்கள் அஞ்சலி செலுத்தினா்.