தமிழகத்தில் 9 சிறப்பு ரெயில்கள் இயக்கம் – தெற்கு ரெயில்வே சூப்பர் அறிவிப்பு
தமிழகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மொத்தம் 9 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் வழக்கமான ரெயில், விமான சேவை முடக்கப்பட்டு உள்ளது. எனினும், சிறப்பு ரெயில்கள் மட்டும் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, நாடு முழுவதும் சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்திற்கு செப்டம்பர் 7ம் தேதி முதல் மொத்தம் 9 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை – கோவை இடையே 3 சேவைகளும், சென்னை – திருச்சி மற்றும் கோவை – மயிலாடுதுறை இடையிலும் தினசரி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல் சென்னை – மதுரை இடையே 2 சேவைகளும், சென்னை – காரைக்குடி, சென்னை – தூத்துக்குடி இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (5-ம் தேதி) காலை 8 மணிக்கும் தொடங்குகிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.