கேரளாவில் வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயம்..

கண்ணூர் அருகே வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அரசியல் கலவரங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு அடிக்கடி மார்க்சிஸ்ட், பாஜ, காங்கிரஸ், முஸ்லீம் லீக் தொண்டர்களுக்கு இடையே பயங்கர மோதல் நடப்பது வழக்கம். மேலும் கட்சி அலுவலகங்கள், வீடுகள் போன்றவற்றில் வெடிகுண்டு வீசும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கண்ணூரை அடுத்த கதிரூர் அருகே பொன்னியம் பகுதியில் திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு 2 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு தலச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெடிகுண்டு தயாரிக்கும்போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இங்கு 6 பேர் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவற்றில் ஒன்று வெடித்துள்ளது. இதில் 3 பேர் காயமின்றி தப்பி விட்டனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் ஒருவர் அங்கிருந்து தப்பிச்சென்று ரகசியமான இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.சம்பவம் குறித்து கண்ணூர் எஸ்பி யதீஷ் சந்திரா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு தயாரித்து வைத்திருந்த 12 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் தொண்டர்கள்தான் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக பாஜ, காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர். ஆனால், வெடிகுண்டு தயாரிப்பில் தங்களது கட்சியினருக்கு எந்த தொடர்பும் கிடையாது என மார்க்சிஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.