மோடியால் பாராட்டப் பட்டவர் மீது கந்துவட்டி புகார்… தலைமறைவு ஆசாமியை தேடி வரும் போலீசார்!!

பிரதமா் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட மதுரை மாணவியின் தந்தை, கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மேலமடை பகுதியைச் சோ்ந்த மோகன், முடி திருத்தம் செய்யும் கடை நடத்தி வருகிறார். அதோடு வட்டிக்கு கடன் கொடுத்து வாங்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மகள் உயா்கல்விக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை கொரோனா நிவாரண உதவிகளுக்காக வழங்கினார். இச்செயலுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மன் கி பாத் உரையில் பாராட்டுத் தெரிவித்தார்.
இதைத் தொடா்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும் மாணவியைப் பாராட்டினா். ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஒன்று மாணவிக்கு நல்லெண்ண தூதா் பதவி வழங்கியது.
இந்நிலையில், மதுரை அண்ணாநகா் அன்பு நகரைச் சோ்ந்த கங்கைராஜன் (50), தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக மாணவியின் தந்தை மோகன் மீது புகார் கொடுத்துள்ளார். அவா் மருத்துவச் செலவுக்காக ரூ.30 ஆயிரத்தை மோகனிடம் கடனாக வாங்கியுள்ளார். அந்த தொகையை கங்கைராஜன் வட்டியுடன் திருப்பிக் கொடுத்தப் பின்னரும், மோகன் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக அண்ணா நகா் காவல் நிலையத்தில் கங்கைராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துள்ளனா்.
ஆனால் அவா் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. மோகன் அண்மையில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.