எல்லையில் சீனாவை பயமுறுத்திய இந்தியா: இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றச்சாட்டு
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
இந்தியா – சீனா இடையே எல்லை விவகாரத்தில், கடந்த மே மாதம் முதல் மோதல் நீடித்து வருகிறது. லடாக்கின் கள்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடயே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்தியாவின் பதில் தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து நிலைமை சீரானது.
இந்நிலையில், லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், இந்திய வீரர்கள் எச்சரிக்கும் வகையில் துப்பாக்கியால் சுட்டதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
சட்ட விரோதமாக எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியை கடந்து, பாங்காங் ஏரியின் தென் கரையில் இந்திய ராணுவம் எச்சரிக்கும் வகையில் சுட்டது. நிலைமையை சமாளிக்க சீன வீரர்கள் எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆபத்தான நடவடிக்கைகளை இந்திய ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக இந்தியா தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.