மத்திய அரசின் வரியால், டி.வி. விலை கணிசமாக உயர வாய்ப்பு

அரசின் தற்காலிக வரிச்சலுகை முடிய உள்ளதால், அடுத்த மாதத்தில் இருந்து டிவி விலை உயர வாய்ப்பு உள்ளது.
டிவி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் பேனல்களை வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்கின்றன. டிவி தயாரிப்பின் முக்கிய அங்கமாக, இதுவே உள்ளது. அதாவது, தயாரிப்பு செலவில், பேனலுக்கு மட்டும் 60 சதவீதமாக ஆகிறது. உள்நாட்டிலேயே இவற்றை உற்பத்தி செய்வது சாத்தியமில்லாத சூழல் உள்ளது; இந்நிலையில், மத்திய அரசு டிவி பேனல் இறக்குமதி வரி 5 சதவீதத்தை ஓராண்டுக்கு ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. இதனால் டிவி தயாரிப்பு செலவு சற்று குறைந்தது. கடந்த செப்டம்பரில் அறிவித்த இந்த சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இதுகுறித்து டிவி உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், ‘‘முழுமையாக வடிவமைக்கப்பட்ட டிவி பேனல்கள் விலை ஏற்கெனவே 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. உதாரணமாக, 32 அங்குல டிவிக்கான பேனல் 34 டாலராக இருந்தது, தற்போது 60 டாலராக உயர்ந்து விட்டது. இதனால் உற்பத்தி செலவு மிகுதியாக உயர்ந்து விட்டது. மத்திய அரசு வரிச்சலுகையை மேலும் நீட்டிக்காத பட்சத்தில் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, டிவி விலையை குறைந்த பட்சம் 4 சதவீதம் உயர்த்த வேண்டி வரும். உதாரணமாக, 32 அங்குல டிவி விலை ரூ.600, 42 அங்குல டிவி விலை ரூ.1,200 முதல் ரூ.1,600 அதிகரிக்கும். இதை விட பெரிய டிவிக்களின் விலை மேலும் உயரும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சீசன் நெருங்கும் நிலையில் இது விற்பனையை பாதிக்கலாம் என்றனர்.
இறக்குமதியை தடுக்க வரி விதிப்பதை மட்டுமே நம்பியிருந்தால், சர்வதேச சந்தையில் இந்தியா போட்டியிட முடியாத நிலை உருவாகும் என, ஒப்பந்த அடிப்படையில் டிவி நிறுவனங்களுக்கு தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.