“ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை… ஆனால்..?” என்று இழுத்த மத்திய அமைச்சர்!

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டமில்லை. ஆனால் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்க உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
“ஆனால், 2030 ஆம் ஆண்டு வரை ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் 50 லட்சம் கோடி ரூபாய் தேவைபடுவதாகவும் குறிப்பிட்டார். இந்த நிதி பற்றாக்குறையை ஈடுகட்டவும், பயணிகளுக்கு தரமான ரயில் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கவும் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.