ஜாமின் கிடைத்தும் என்ன பயன்? புலம்பும் மருத்துவர் தணிகாசலம்

குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு, மற்ற இரண்டு வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில் விடுதலையானால் மட்டுமே அவரால் சிறையிலிருந்து வெளிவர முடியும் என்ற நிலை உள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை போலீசார் கடந்த மே மாதம் கைது செய்தனர். பின்னர் திருத்தணிகாசலம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, அவர் கொடுத்த மருந்து, மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக 2 பேர் புகாரளித்தனர். குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாட்டிற்காக நீண்ட நாட்களாக மருந்து கொடுத்து பணம் பறித்ததாகவும், அதே போல் வெண்புள்ளிகள் குறைபாட்டிற்கு அவர் அளித்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மற்றொரு வழக்கும் தொடரப்பட்டு அந்த இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார்.
அடுத்தடுத்து புகார்கள் வரவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுகாதாரத் துறை அளித்த புகாரின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் மேலும் இரண்டு வழக்கில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்களில் தன்மீது தொடரப்பட்ட வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் எனவே தன்னை விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் அவரை நிபந்தனை ஜாமினில் இரண்டு வழக்குகளிலும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் விடுதலையானால் மட்டுமே அவர் சிறையிலிருந்து வெளிவர முடியும்.