ஆன்லைனில் கேம் விளையாடிய சிறுவனால், 90 ஆயிரம் பணத்தை இழந்த பெற்றோர்!!

சாயல்குடியில் 12 வயது சிறுவன் தனது அம்மாவின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஆன்லைனில் கேம் வவிளையாடி 90 ஆயிரம் பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹிரித்திக் ரோஷன். ஃப்ரீ பையர் என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார். 12 வயதே ஆன அந்த சிறுவன் தனது அம்மாவின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி அந்த விளையாட்டை செல்போனில் விளையாடியுள்ளார்.
இதன்மூலம் தாயின் வங்கி கணக்கில் இருந்த 90 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார் அந்த சிறுவன். இதுகுறித்து தெரியவந்தபோது அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பெற்றோர் அந்த சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கினர். அதாவது 90 ஆயிரம் வரை 1,2,3 என எண்களை எழுதச்சொல்லி தண்டனை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை செந்தில்குமார் கூறுகையில், “சமீபத்தில் வங்கிக்கு சென்று பாஸ்புக்கை பிரிண்ட் செய்ய சென்றோம். அப்போது 90 ஆயிரம் குறைந்திருந்தது. அதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது ப்ளே ஸ்டோர் மூலமாக ஃப்ரீ பயர் கேம் விளையாடியதால் அதற்கு பணம் பிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். இது குறித்து பையனிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அவன் ஏடிஎம் கார்டை வைத்து கேம் விளையாடியுள்ளான் என்று. வீட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காக வந்த எஸ்.எம்.எஸையும் அழித்திருக்கிறான்.
இதுப்போன்று எங்களுக்கு மட்டுமல்ல. பெரும்பாலானோருக்கு நடக்கிறது. அவர்கள் வெளியே சொல்வதில்லை. பையன்களையும் கண்டிப்பதில்லை. ஒரு விழிப்புணர்வுக்காகவே இந்த தகவலை வெளியே சொல்ல வேண்டியுள்ளது. பிள்ளைகளின் கைகளில் செல்போன் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைப்பது தவறு” எனத் தெரிவித்தார்.