ஜி ஜின்பிங்கை விமர்சித்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்ட சீன நீதிமன்றம்!
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சித்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா எப்போதும் ஒரு சர்வாதிகாரம் மிகுந்த நாடு. அங்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி சொல்வது தான் சட்டம். அரசியல் வட்டத்துக்குள் கம்யூ., கட்சி மற்றும் ஆட்சியை எதிர்ப்பவர்கள் அல்லது விமர்சிப்பவர்களை சீன அரசு தண்டிக்கத் தவறாது. தங்கள் கட்சியினரும் விதிவிலக்கு அல்ல. இதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் அரசின் முன்னாள் உறுப்பினரும் சீன ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான 69 வயதான ரென் சிகுவான். ஒரு காலத்தில் சீன கம்யூனிச அரசு உறுப்பினராக இருந்த இவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் மிகவும் நம்பிக்கையான நபராக விளங்கிய இவர், பின்நாட்களில் ஜி ஜிங்பிங் ஆட்சியை எதிர்க்கத் தொடங்கினார்.
அவர் “இந்த தொற்றுநோய், கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் உயர் நிலையில் இருக்கும் தலைவர்கள் தங்கள் நலன்களையும், முக்கிய நிலைப்பாட்டையும் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள்” என்று ரென் விமர்சித்திருந்தார். மேலும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் குறித்து, “அங்கு நிற்பது தன் புதிய ஆடைகளை காட்டும் ஒரு அரசாளர் அல்ல, அரசராக இருந்தாலும், உடைகள் பறிக்கப்பட்ட ஒரு கோமாளி அவர்” என்று ரென் மேலும் கூறியிருந்தார்.
சீன கம்யூனிச அரசு உதவியோடு தனது தொழிலை பல மாகாணங்களில் விரிவுபடுத்தி அதிக லாபம் ஈட்டி வந்தவர், தற்போது ஜி ஜிங்பிங் கொரோனா தாக்கத்தை சரியாகக் கையாளவில்லை என்கிற ரீதியில் விமர்சனம் செய்ததால், ரென் மீது ஆத்திரம் அடைந்த ஜிங்பிங், இவரது குற்றச்சாட்டுகளை மீண்டும் கிளறினார்.
கடந்த மார்ச் மாதம் சீனாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தபோது இவர் திடீரென ஊடக பார்வையில் இருந்து காணாமல் போனார். பின்னர் இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பல ஊழல்களை செய்துவிட்டு தலைமறைவாகியதாக இவர் மீது குற்றம் சாட்டியது சீன நீதிமன்றம். மேலும் “ரென் தன்னுடைய அனைத்து குற்றங்களையும் தானாக முன்வந்து உண்மையாக ஒப்புக்கொண்டார்” என்று சீன அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஹுவாயுவானில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவருக்கு எதிரான தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டு, 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சீன மீடியாக்களால் அதிகம் பகிரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.