வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்

ஆப்கானிஸ்தான் – இந்தியா இடையிலான ஏற்றுமதியை மீண்டும் துவக்க, மூடப்பட்ட வாகா எல்லையை நாளை புதன்கிழமை முதல் திறக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்கு பல்வேறு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, உலர் பழ வகைகள், மாதுளை, பப்பாளி, தர்பூசணி, வெங்காயம், தோல் பொருட்கள், முந்திரி, பாதாம், பேரீச்சை ஆகியன முக்கியமான இறக்குதி பொருட்கள்.
‘கொரோனா’ பரவல் ஏற்பட்டதை அடுத்து மார்ச் மாதம் முதல் பஞ்சாப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியை பாகிஸ்தான் தரப்பு முற்றிலுமாக மூடியது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாகிஸ்தான் வழியே வாகா எல்லையை கடந்துதான் இந்தியாவுக்குள் வருவது வழக்கம்.
வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்றுமதி தடைபட்டது.
இதை சரி செய்ய வாகா எல்லையை மீண்டும் திறக்குமாறு பாகிஸ்தானிடம் ஆப்கன் அரசு வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்று நாளை முதல் ஆப்கன் ஏற்றுமதிக்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.