அதற்கு இது பதிலில்லையே.. ப.சி., கேட்ட கேள்வியும் அதிகாரிகளின் விளக்கமும்

பி.எம்., கேர்ஸ் நிதிக்கு மார்ச் 27 முதல் 31 வரையிலான 5 நாட்களில் மட்டும் ரூ.3076 கோடி வசூலானது எப்படி, நிதி அளித்தது யார் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் பிரதமர் அலுவலக அதிகாரிகளோ, மோடி தூய்மை கங்கை, பெண் கல்வி திட்டம் போன்றவற்றிற்கு ரூ.103 கோடிக்கு மேல் நிதி அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.
பிரதமர் நிவாரண நிதி என்ற ஒன்று உள்ள போது தனியாக பி.எம்., கேர்ஸ் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு துவக்கியுள்ளது. இந்த அறக்கட்டளை மற்ற துறைகளை போல இந்திய பொது கணக்கு தணிக்கையாளரால் தணிக்கை செய்ய இயலாது. நிதி அளிப்பவர்களின் தகவல்களும் இடம்பெறாது. வெளிநாட்டிலிருந்து நிதிகளை பெறவும் விதி விலக்கு உண்டு.
இது போன்ற மர்மான அறக்கட்டளை எதற்கு என காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது. இதில் ஊழல் நடைபெற வாய்ப்பு அதிகம், ஒவ்வொரு அறக்கட்டளையும் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக நிதி பெறும் போது நன்கொடையாளர் பெயர்களை வெளியிட வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளை தனக்கென தனி சட்டம் போட்டுக்கொண்டதோ என்னவோ, தகவல்களை ரகசியமாக வைத்துள்ளது.
இது ப.சிதம்பரம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் அதற்கு பதிலளிக்காமல், மோடி புராணம் பாடியுள்ளனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள். பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளைக்கு அவர் ஆரம்ப நிதியாக ரூ.2.25 லட்சம் தன் சொந்த பணம் வழங்கியதாகவும், பரிசுப் பொருள் ஏலம், சியோல் அமைதி விருது போன்றவற்றின் மூலம் கிடைத்த ரூ.103 கோடிக்கு மேற்பட்ட தொகையை கங்கை தூய்மை, நதிகள் தூய்மை, பெண் கல்வி, ஏழைகள் நலனுக்கு தந்திருப்பதாக கூறியுள்ளனர்.