கொரோனாவிலிருந்து குணமடைய, அமைச்சர் டிவிட்டரில் பிரார்த்தனை….

தமிழகத்தில் கொரோனா தாக்கத்துக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. மக்கள் அடர்த்தி அதிகமுள்ள சென்னையில், கூடுதல் பாதிப்பு காணப்படுகிறது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப் பணியாளர்களும், சமூக தொண்டாற்றும் தன்னார்வலர்களும், அரசியல்வாதிகளும் இதில் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சமீபத்தில், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.]
இதைத்தொடர்ந்து, அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அன்பழகன் அளவுக்கு இல்லாமல், பழனி எம்.எல்.ஏ. நல்ல உடல் நலத்துடனேயே காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து அரசியல்வாதிகளும் கொரோனா தொற்றுக்கு உள்ளாவது அரசியல் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, எம்.எல்.ஏ. பழனி விரைவில் குணம்பெற கடவுளை வேண்டுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பர், திரு.கே.பழனி, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.” என்று டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.