வரலாற்றில் 67-வது முறையாக, இன்று 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணை வரலாற்றில், 67-வது முறையாக, அதன் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் 100 அடியை எட்டியது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணைக்கு, தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன்முறையாக கடந்த மாதம் 25-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி உயரத்தை எட்டியது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் அடுத்த இரு தினங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே சரியத் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று 99.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. அணை வரலாற்றில் 67-வது முறையாகவும், நடப்பாண்டில் 2வது முறையாகவும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதனால், சேலம், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், தமிழக மக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.