பிடித்தம் செய்யப்பட்ட பணம், திரும்ப போலீசுக்கே ஒப்படைப்பு!

தமிழகத்தில், கொரோனா நிவாரண பணிகளுக்காக, போலீசாரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட, ஒரு நாள் சம்பளமான, 8.5 கோடி ரூபாய் பணம் அவர்களுக்கே திரும்பி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில், கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி வழங்கும்படி, முதல்வர் பழனிச்சாமி, வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, போலீசாரும், ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர். அந்த வகையில், போலீசாரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட, ஒரு நாள் சம்பளம், 8 கோடியே, 41 லட்சத்து, 37 ஆயிரத்து, 286 ரூபாய்.
இந்நிலையில், போலீசார், கொரோனா தடுப்பு பணியில், ஓய்வின்றி பணிபுரிந்து வருவதால், அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட, ஒரு நாள் சம்பளத்தை, திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அரசுக்கு, டி.ஜி.பி., கடிதம் எழுதினார். அதை ஏற்று, போலீசாரிடம் பிடித்தம் செய்த பணத்தை, திருப்பி தர, அரசு அனுமதி அளித்துள்ளது.