விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்வு!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயரிழந்தவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது.
விருதுநகர் அருகே செங்குளம் பகுதியில் சிவகாசியை சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான ராஜேஸ்வரி என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, திடீரென ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆலையின் 6 அறைகள் இடிந்து தரை மட்டமாகின. இதில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவரில், இருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 6 பெண்களின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர், சிறப்பு அனுமதியின் பேரில் பிரேத பரிசோதனை செய்தனர். வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு பட்டாசு ஆலை நிர்வாகத்தின் சார்பில் 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்களுக்கு இழப்பீடு வழங்கும் வரை உடல்களை பெறமாட்டோம் என அறிவித்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.