“இரண்டு நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்சேர்க்கை!” அசத்தும் அரசு பள்ளிகள்!!

தமிழகத்தில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி இரண்டே நாட்களில் அரசு பள்ளிகளில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய மாணவர்கள் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் “கடந்த இரண்டு நாட்களில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தமாக 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது” என தெரிவித்த பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ச.கண்ணப்பன், ‘வருகின்ற நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்’ என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.
ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்கள் வராவிட்டாலும் பெற்றோர்கள் உரிய ஆவணங்களை காட்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவர்சேர்க்கை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.