மனநலம் பாதித்த பெண்ணிடமிருந்து பணம் கையாடல்!

திருப்பத்தூர், புருஷோத்தமன் குப்பம் பகுதியில் வசித்து வந்த சுப்பிரமணி என்பவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனால் அவருடைய மனைவி ஐயம்மாள் மன நலம் பாதிக்கப்பட்டார். அவர்களுடைய மகன் ராகுல் காந்தி 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் சொல்வது போல் வந்த அதிகாரிகள், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) கீழ் வீடு கட்டித்தருவதாக கூறி, ஆதார் உட்பட அனைத்து அடையாள அட்டைகளின் நகல்களையும் வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால் இதுவரையில் வீடு கட்ட யாரும் வர வில்லை.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஐயம்மாள் பேரைப் பயன்படுத்தி, நான்கு முறை பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வஜ்ரவேல் தன்னுடைய உறவினர்களுக்கு அந்த பணத்தை மாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவ்வூரில் உள்ளவர்கள் பலரும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, வீடில்லாமல் கஷ்டப்படும் ஐயம்மாளுக்கு, அக்கம் பக்கத்தினர் உணவை வழங்கி வருகின்றனர். வெயில் காலத்தில் சாலையில் உறங்கி வந்த ஐயம்மாள், தற்போது மழைக்காலம் என்பதால் உறங்குவதற்கு இடமின்றி, தவித்து வருகிறார்.