உ.பி யில் பாக்பத் மசூதியில் ஹனுமன் மந்திரம் ஓத அனுமதி வழங்கிய இமாம் பணியிலிருந்து நீக்கம்!
உத்திரபிரதேசத்தின் பாக்பத் மசூதியில் ஹனுமன் மந்திரம் ஓத அனுமதி வழங்கிய இமாம் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 29-ம் தேதி 2 முஸ்லிம்கள் உள்ளிட்ட சிலர் உ.பி.யின் மதுரா கோயிலில் தொழுகை நடத்தினர். சர்ச்சைக்குள்ளான இச்சம்பவத்தில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முஸ்லிம் ஈத்கா மற்றும் மசூதியில் இந்துத்துவாவினரால் ஹனுமன் மந்திரம் ஓதப்பட்டது.
பாக்பத்தின் வினய்பூர் கிராமத்தில் உள்ள மசூதியில், பாஜக மாவட்ட துணைத்தலைவர் மனுபால் பன்ஸல் அதன் வினய்பூர் மசூதியின் இமாம் ஹசன் அலியிடம் அனுமதி பெற்றிருந்தார். இதனால், பன்ஸல் மீது புகார் செய்யவும் முடியாமல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்த தகவல் சமூகவலை தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் அம்மசூதியின் இமாமான ஹசன் அலி நேற்று பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து ஹசன் தன் வீட்டை காலி செய்து குடும்பத்துடன் சொந்த ஊரான காஜியாபாத்தின் லோனிக்கு சென்று விட்டார். இந்த முடிவை அந்த கிராமத்து முஸ்லிம்களில் சிலர் ரகசியக் கூட்டம் நடத்தி எடுத்திருந்தனர்.
இதனால், வினய்பூர் கிராமத்து முஸ்லிம்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கிராமப்பஞ்சாயத்தைக் கூட்டி இப்பிரச்சனை குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கேள்விப் பட்ட பன்ஸல், வினய்பூர் முஸ்லிம்கள் இமாம் ஹசனை நீக்கியது மிகவும் தவறு என்றும் அவர் தனக்கு அனுமதி வழங்கி சகோதரத்துவத்தை காட் டியதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.