தமிழக முதல்வர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வாரா?

தமிழகத்தில் வேகமாகப் பரவும் கொரோனாவுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதுபோலவே முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரான வளர்மதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வருக்கும் மிகவும் நெருக்கமான மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக, நேற்று நடந்த சென்னை தலைமைச் செயலக நிகழ்வில், நிவாரண பணிக்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், 5 கோடி ரூபாய் காசோலையை, அமைச்சர் தங்கமணி நேரில் வழங்கினார். அதில் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் துறைசார்ந்த உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். தற்போது தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்திக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேபோல நேற்று முன் தினம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டார். அவருடன அமைச்சர் வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கத் துவங்கியுள்ளன.