“திரையரங்குகளைத் திறக்க முடியும் போது மெரினா கடற்கரையைத் ஏன் திறக்க முடியாது?” தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி!!
சென்னை மெரினா கடற்கரையைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறப்பதைத் தாமதித்தால், நீதிமன்றம் தலையிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினாவைச் சுத்தப்படுத்துவதற்குப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தனி நீதிபதி முன் உள்ள வழக்கை, இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, நவம்பர் இறுதி வரை மெரினாவைத் திறக்க வாய்ப்பில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.
இந்த பதிலை கேட்ட நீதிபதிகள், “திரையரங்குகளைத் திறக்கும்போது கடற்கரையைத் திறக்க முடியாதா? சென்னை மெரினா கடற்கரையைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறப்பதைத் தாமதித்தால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 18-ம் தேதிக்குத் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.