சாலையில் பிச்சை எடுத்த பிச்சைக்காரரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை அதிகாரிகள்!!

சமீபத்தில் சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்த காவல்துறை அதிகாரிகளுக்கு கண்ணீர் வரவழைக்கும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளான ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியா ஆகிய இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இயல்பான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்த இருவரும், அவரை பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது என உணவு மற்றும் உடைகளை வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
அதன் பின்னர் அந்த இடத்தை விட்டு இரண்டு போலீஸ் அதிகாரிகளும் செல்ல தயாரான நிலையில், தங்களின் பெயரைச் சொல்லி அழைக்கும் சத்தம் கேட்டது. அப்போது யார் என பின்னால் திரும்பிப் பார்த்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது என யாருக்கு உணவும், உடையும் வாங்கி கொடுத்தார்களோ அந்த பிச்சைக்காரர் தான் இருவரின் பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்கிறார் .
உடனே அவரிடம் சென்ற இரண்டு போலீஸ் அதிகாரிகளும், நீங்கள் யார், எங்கள் இருவரின் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும் எனக் கேட்டுள்ளார்கள். அப்போது முகத்தில் தாடியுடனும், அழுக்கான உடையிலும் இருந்த நபர் கூறிய தகவல் இரு காவல்துறை அதிகாரிகளின் மனதை தாறுமாறாக நொறுக்கி போட்டுள்ளது .

அவர் காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய மனிஷ் மிஸ்ரா என்பதும், அவர் அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் காவல்துறையையே ஒரு கலக்கு கலக்கியவர் என்பதும் தெரிய வந்தது. இதில் ரத்னேஷ் சிங் மற்றும் விஜய் படோரியா ஆகிய இருவரும் மேலும் அதிர்ச்சி அடைய முக்கிய காரணம் என்னவென்றால், அவர்கள் இருவரும் மனிஷ் மிஸ்ராவின் கீழ் பணியாற்றிய நபர்கள் என்பதால்தான்.
இதில் துப்பாக்கி சுடுவதில் வல்லவரான மனிஷ் மிஸ்ரா நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவராவார் . இவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட மனிஷ் மிஸ்ரா இப்படி சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் ஏன் அவரை கவனிக்கவில்லை என்பது பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை . பின்னர் மனிஷ் மிஸ்ராவை சிகிச்சைக்காக, ரத்னேஷ் சிங்கும், விஜய் படோரியாவும் மருத்துவமனைக்கு கூப்பிட்டு சென்றார்கள்.