தென்கொரிய தலைநகரமான சியோலின் மேயராக பதவி வகித்த வந்த பார்க் ஒன்சூன், மலைப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சியோல் நகரின் மேயராக பதவி வகித்து வந்தவர் பார்க் ஒன்சூன், வயது 64. தென்கொரியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டு மேயராக தேர்வானார். அதன்பின்னர் 2018ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று மேயரானார்

இந்நிலையில் மேயர் பார்க் ஒன் சூன் திடீரென மாயமானார். அவர் மாயமான தகவலை அவரது மகள் தான் முதல்முதலாக போலீசுக்கு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், அவரது செல்போன் கடைசியாக சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் செயல்பாட்டில் இருந்தது. அதன்பிறகு செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
சியோலின் சங்பக் மலைப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 600 பேர் , பார்க்கை தீவிரமாக தேடினர். சுமார் 7 மணி தேடுதலுக்கு பின்னர் அவரை பிணமாக கண்டுபிடித்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன், மேயர் மீது, சக ஊழிய பெண் ஒருவர், பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.