‘கொரோனாவை விட ஆபத்தான நோய்…’ சீனா பொய் செய்தி?

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ‘கொரோனா வைரஸ் பற்றிய தகவலை, சீனா, மற்ற நாடுகளுக்கு மறைத்தது தான் அதிக பாதிப்புக்கு காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், கஜகஸ்தான் நாட்டில் புதிய வகை நோய் பரவுவதாக, அங்குள்ள சீன துாதரகம் கூறியுள்ளது. “கொரோனாவை விட ஆபத்தான நோய், கஜகஸ்தான் முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு, கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 1,772 பேர் பலியாகி உள்ளனர். ஜூனில் மட்டும், 628 பேர் பலியாகி விட்டனர்.
கொரோனாவால் பலியானோரின் விகிதத்தை விட, இந்த புதிய நோயால் பலியானோரின் விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, கஜகஸ்தானில் உள்ள சீன மக்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கஜகஸ்தானிலிருந்து சீனாவுக்கு வருவோர் பற்றிய தகவல் முன் கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்” தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கஜகஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. “உறுதி செய்யப்படாத தகவலை சீன துாதரகம் வெளியிட்டது மிகவும் தவறானது” என்று கஜகஸ்தான் அரசு கவலை தெரிவித்துள்ளது.