கொரோனா தொற்று குறித்து அலட்சியமாக இருந்த இரு உயர் அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்த கிம் ஜாங் அன்!!

கொரோனா தொற்று குறித்து அலட்சியமாக இருந்ததாக வடகொரியாவில் இரு உயர் அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வந்தாலும், வடகொரியா மண்ணில் இதுவரை ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்நாடு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. எனினும், வடகொரியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இதனை அந்நாடு மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் சீனா, தென்கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா பரவி விடாமல் தடுப்பதற்காக பல கடுமையான நடவடிக்கைகள் வடகொரியா எடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாகக் கூறி உயர் அந்தஸ்து கொண்ட ஒருவருக்கு தூக்கு தண்டனையை கிம் ஜாங் அன் அரசு நிறைவேற்றியுள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், கொரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில் வடகொரிய கடலில் மீன்பிடிக்க தடை விதித்தும், தலைநகர் பியோங்யாங் நகரில் பொது முடக்கத்தை அமல்படுத்தியும் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக தென்கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.