19.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி..

இதுவரை 19.5 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கின. நேற்று வரை நாடு முழுவதும் 16,15,504 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இன்று மாலை 7.10 மணிவரை நிலவரப்படி 3,34,679 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று ஒரே நாளில்(மாலை 7.10 மணி நிலவரப்படி) 3,34,679 பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் இதுவரை மொத்தம் 19,50,183 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனிடையே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 348 பேர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் அதிகபட்சமாகக் கர்நாடகத்தில் 2,30,119 பேருக்கும், ஒடிசாவில் 1,77,090 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.