காலிமனைகளில் தண்ணீர் தேங்கியதால் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு!!

புதுவையில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக வயல்வெளிகள், காலி மனைகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கியுள்ளது.
பராமரிப்பின்றி இருக்கும் காலிமனைகளில் அதிக அளவு புதர்கள் நிரம்பியிருந்தன. அதில் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிக அளவில் இருந்தன. தற்போது அந்த காலிமனைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வசிக்க இடமில்லாமல் வெளியே வர தொடங்கியுள்ளன. அவை சாலைகளில் சர்வ சாதாரணமாக நடமாடுகிறது.
அதுமட்டுமின்றி நீர்நிலைகளில் அவைகள் கூட்டமாக திரிந்து வருகின்றன. விஷஜந்துகளின் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். மழை பெய்யும் நேரங்களில் பாம்பு, தவளை போன்றவை வீட்டிற்குள்ளேயே புகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.