குப்பையில் வீசிய நகை.. திருப்பி ஒப்படைத்த துப்புரவுத் தொழிலாளி..?

“மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்” என கவிஞர் கண்ணதாசன் என்றோ எழுதியதை தனது குணத்தினாலும், தன்னலமற்ற செயலினாலும் மெய்ப்பிக்க செய்துள்ளார் சென்னையை சேர்ந்த 38 வயதான மூர்த்தி.
சென்னை அடையாறு பகுதியில் பேட்டரியில் இயங்கும் URBASER துப்புரவு வாகனத்தை ஓட்டி வருகிறார் மூர்த்தி. தினந்தோறும் அந்த பகுதியில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளில் சேரும் குப்பைகளை வாகனம் மூலம் சென்று சேகரிப்பது தான் அவரது பணி.
வழக்கம்போல தனது பணியில் ஈடுபட்டிருந்த அவர் அண்மையில் தான் சேகரித்த குப்பையில் ஜியாமெட்ரி பாக்ஸ் ஒன்று இருப்பதை கவனித்துள்ளார். அதில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், கொஞ்சம் நகையும் இருந்துள்ளன. உடனடியாக அதுகுறித்த தகவலை தனது மேற்பார்வை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார் அவர். தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இப்போது அது உரியவரின் கைகளுக்கு சென்றுள்ளது.
“எனக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். கண்ணகி நகரை சேர்ந்தவன். முதலில் பெயிண்டராக வேலை செய்தேன். அப்புறம் ஆட்டோ ஓட்டினேன். சவாரி கிடைக்கவில்லை. இப்போது இந்த பேட்டரி வாகனத்தை ஓட்டி வருகிறேன். உழைத்து சம்பாதிப்பது தான் நிலைக்கும்” என்கிறார் மூர்த்தி.

இதற்கு முன்னர் மூர்த்தி பெயிண்டராக வேலை செய்தபோதும் அவருக்கு ஒரு பை கிடைத்துள்ளது. அதில் 70 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், செல்போன் ஒன்றும் இருந்துள்ளது. அதையும் உரியவரிடம் தேடி சென்றுள்ள கொண்டுள்ளார் உயர்ந்த உள்ளம் கொண்ட அவர்.
மூர்த்தி மட்டுமல்லாது பெரும்பாலான துப்புரவு தொழிலாளர்கள் அவர் பணி செய்கின்ற போது தட்டுப்படுகின்ற மதிப்புமிக்க பொருட்களை உரியவரிடம் நிச்சயம் ஒப்படைத்து விடுவார் என்கிறார் துப்புரவு பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரி சதிஷ்.