பெற்றோரின் அலட்சியத்தால் வாட்டர் ஹீட்டரில் கை வைத்து பரிதாபமாக பலியான ஒன்றரை வயது குழந்தை!

வாணியம்பாடியில் ஒன்றரை வயது குழந்தை வாட்டர் ஹீட்டரில் கை வைத்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. இவரது கணவன் புருஷோத்தமன் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்பள்ளிப்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தையுடன் வந்த பவித்ரா இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பவித்ரா குளிப்பதற்காக தண்ணீரை வெப்பப்படுத்த மின்சார வாட்டர் ஹீட்டர் கருவியை சில்வர் குடத்தில் பொருத்தி தண்ணீர் காய வைத்துவிட்டு சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை அனன்யா தண்ணீரில் கையை வைத்தது. உடனே மின்சாரம் தாக்கியதில் குழந்தை மயங்கி விழுந்தது. குடம் கீழே விழுந்த சப்தம் கேட்ட தாய் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரின் அலட்சியத்தால் பரிதாபமாக குழந்தை இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.