ஜெயலலிதா சமாதியை குண்டு வீசி தகர்ப்பேன்.. நடவடிக்கை எடுக்கக் கூடாது.. வாலிபர் மிரட்டல்

அரசு வேலை வழங்காவிட்டால் ஜெயலலிதா சமாதியை குண்டு வீசி தகர்ப்பதாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொருக்குப்பேட்டை பாரதிராஜா குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்ட பிரசாத். இவர் டி.ஜி.பி. அலுவலுகத்துக்கு நேரில் சென்று பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அதில்கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு உடனடியாக எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுபோன்று பணி வழங்காவிட்டால், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன்.
அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
இவ்வாறு மணிகண்ட பிரசாத் தனது புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை படித்து பார்த்ததும் டி.ஜி.பி. அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மணிகண்ட பிரசாத்தை அருகில் உள்ள மெரினா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மெரினா போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மணிகண்ட பிரசாத் திருவல்லிக்கேணியில் உள்ள மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நேரில் சென்று வாலிபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் நேற்று பகலில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.