கேரள தங்கக் கடத்தல் வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கருக்கு ஜாமின் வழங்க, சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின், திருவனந்தபுரத்தில் உள்ள கிளையின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, துாதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் தொடர்புள்ளதாக, முதல்வரின் முதன்மை செயலராக பணியாற்றி வந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த மோசடி தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை மற்றும் சுங்கத் துறை தனித்தனியாக விசாரித்து வருகின்றன. ஏற்கனவே, சிவசங்கரின் நீதிமன்றக் காவல், இம்மாதம், 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்கில், ஜாமின் கேட்டு, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், சிவசங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமின் வழங்க, நீதிமன்றம் மறுத்துள்ளது.