இந்தோனேசியாவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 34 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தினால் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதேபோல் அருகில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
