“மராட்டியத்தில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பாதிப்புக்கு சாத்தியமிருக்கிறது” – உத்தவ் தாக்கரே

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக விளங்கும் மராட்டியத்தில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு, தினம் தினம் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உள்ளது.
இந்நிலையில் இன்று மாரத்வாடா மற்றும் நாசிக் பகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, “அன்றாட வேலைகளுக்காக பொதுமக்கள் வெளியில் வருவதால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பாதிப்புக்கு சாத்தியமிருக்கிறது. மேலும் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
“பிரிட்டனில், அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கப்படுகிறார்கள். தேவைப்பட்டால் அவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் இருக்க நாம் அனுமதிக்கிறோம். ஆனால் அவர்கள் வெளியேறி மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது போன்ற சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யுமாறு உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய நிலவரப்படி மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 430 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 21 ஆயிரத்து 176-ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 16 ஆயிரத்து 450-ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை 35,191-பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் தற்போதைய நிலவரப்படி தொற்று பாதிப்புடன் 2 லட்சத்து 69 ஆயிரத்து 119-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.