கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம்; மனசாட்சியற்ற செயல் என கண்டனம்

கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களுக்கு நகைகளை அடமானம் வைப்பதன் பேரில், கடன் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள பெரும்பாலான மக்கள், தங்களிடம் கைவசம் உள்ள தங்க நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகள், மத்திய அரசின் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எடுக்கப்பட உள்ளன. இதனால், மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நவடிக்கைக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய , நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனையும் நிறுத்தி வைப்பது மனசாட்சியற்ற செயலாகும்.
எனவே, இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தால், பழனிசாமி அரசு அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.