இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று எளிதில் பரவ கூடிய ஒன்றாக மாறி பலரை பாதிப்பிற்கு ஆளாக்கியது. இதுதவிர புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்புகளும் அந்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அறியப்பட்டது.
இதனால், அந்நாட்டுடனான பயணிகள் விமான போக்குவரத்து சேவைக்கு பல்வேறு நாடுகள் தற்காலிக தடை விதித்தன. இவற்றில் இந்தியாவும் அடங்கும். இந்நிலையில், லண்டன் இம்பிரீயல் கல்லூரி மற்றும் சவுதாம்ப்டன் பல்கலை கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதில், ஐ.சி.யூ. சூழலில், வென்டிலேட்டர் தேவையின்றி சிகிச்சை பெற்ற 18 சதவீதத்தினருக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அல்லது சந்தேக நபர்கள் என அறியப்பட்ட 13 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் இந்த ஆய்வு நடந்தது. இவற்றில் வீட்டில் மருத்துவ உதவி வழங்கப்பட்ட நோயாளிகளில் 16 சதவீதத்தினருக்கும் மற்றும் வீட்டில் எந்த உதவியும் தேவைப்படாத ஆனால் சுவாச கோளாறுகளை கொண்ட 11 சதவீதத்தினருக்கும் குறைந்த அளவில் மனநல பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கான வென்டிலேட்டர் சிகிச்சை பெற்ற 3 பேரில் ஒரு நபருக்கு சிகிச்சைக்கு பின்னர் மனநல பாதிப்பு ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் 4 லட்சம் நோயாளிகள் கொரோனா பாதிப்புக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை உயர கூடும். இதில் தப்பி பிழைத்தவர்களில் மனநல பாதிப்புகளை சந்தித்தவர்கள் அதிகம் என ராயல் கல்லூரியின் தலைவர் அட்ரியன் ஜேம்ஸ் தெரிவித்து உள்ளார்.
அதனால், கொரோனா சிகிச்சை முடிந்து சென்ற பின்னர், சிறந்த மற்றும் கூட்டு முறையிலான மனநல சிகிச்சை அவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் ஜேம்ஸ் கூறியுள்ளார்.
