தேனி மக்களவை தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

தேனி மக்களவை தொகுதி வெற்றிக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக் கோரிய எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் குமார் 76,319 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், “தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் வழக்கை நிராகரிக்கக் வேண்டும்” என ஓ.பி.ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வாதங்கள் முடிவுற்ற நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி எம்.எஸ் ரமேஷ், “ஓ.பி.ரவீந்திரநாத்க்கு எதிரான தேர்தல் வழக்கு ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.