‘தமிழகத்தில் மின்கட்டண உயர்வு எல்லாம் கிடையாது..’ அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
முதல்வரின் சாதனைத் திட்டங்களை திசை திருப்பவே, மின்கட்டண உயர்வு என்ற அப்பட்டமான பொய்யை எதிர்கட்சி தலைவர் சொல்லி வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
இந்தியாவிலே தமிழகத்தில்தான், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமென்று ஊடகங்கள் எல்லாம் பாராட்டி வருகின்றனர்
இதனை திசைதிருப்ப ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறார். மின்கட்டணம் உயர்வு என்று ஒரு விஷம பிரச்சாரத்தை செய்து வருகிறார். இதற்கு சரியான பதிலடியை முதல்வரும், மின்சாரத்துறை அமைச்சரும் கூறி உள்ளனர்.
இந்த கரோனா காலத்தில் மின் கட்டண உயர்வு எதுவும் கிடையாது. தமிழகத்தில் 300 யூனிட்டுக்கு கட்டணம் 500 ரூபாய் தான் ஆனால் கேரளத்தை எடுத்து கொண்டால் 500 யூனிட்டுக்கு 1,165 ரூபாய், மகாராஷ்டிரத்தை எடுத்துக்கொண்டால் 500 யூனிட்டுக்கு 1,776 ரூபாய் வசூலிக்க படுகிறது
அதுமட்டுமல்லாது தமிழகத்தில் 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவமாக வழங்கப்படுகிறது. இந்த 100 யூனிட் மின்சாரம் மூலம் ஆண்டுக்கு 2876 கோடி ரூபாய் இந்த நான்காண்டுகளில் மட்டும் 11,512 கோடி ரூபாயை தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தினந்தோறும் 10 மணி நேரம் மின்வெட்டை ஏற்படுத்தி தமிழகத்தை இருட்டாக்கிய ஸ்டாலின் தற்போது மின் கட்டணம் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்று மக்களே இன்று பேசி வருகின்றனர், மக்களுக்காக தன்னையே அர்பணித்து வாழும் முதல்வர் பின்னால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் உள்ளனர்” என்று அவர் கூறினார்