வடகொரியாவுக்கு இந்தியா சார்பில் ரூ.8 கோடி மருத்துவ உதவி!

உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை ஏற்று இந்தியா 8 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உதவியை வட கொரியாவுக்கு வழங்கியுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ வடகொரியாவின் மருத்துவ விநியோக நிலைமையில் பற்றாக்குறை இருப்பதை இந்தியா உணர்கிறது. காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் மூலம் 8 கோடி ரூபாய் மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. மருத்துவ உதவி உலக சுகாதார அமைப்பின் காசநோய் தடுப்பு திட்டத்தின் மூலம் வடகொரியாவுக்கு வழங்கப்படும்.” என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில், வடகொரிய அதிகாரிகளிடம், மருந்துகளை வடகொரியாவுக்கான இந்திய தூதர் அதுல் ஒப்படைத்தார்.
மருத்துவ உதவிகளை பெற்றுக்கொண்ட வடகொரிய அதிகாரிகள் இந்தியாவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.