அறுவை சிகிச்சையே வேண்டாம் பழைய சோற்றில் உள்ள மகத்துவங்கள்!

நம் முன்னோர்கள் தினமும் உண்டு வந்த பழைய சோறின் மகத்துவத்தைக் கண்டுபிடித்துள்ளனர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள். அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் குடல் சார்ந்த பிரச்னைகளுக்காக வரும் நோயாளிகளைக் கொண்டு பழைய சோறு குறித்த ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.
அந்த ஆராய்ச்சியில், நாம் சாதாரணமாக நினைக்கும் பழைய சோறில் உடலுக்கு நன்மை பயக்கும் லாக்டோ பேசிலஸ், ஈஸ்ட், பைடோ பேக்டிரியல், ஸ்டெப்சோ, சேக்ரோ மைசிஸ் ஆகிய நுண்ணியிர்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். நம் உணவில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் இல்லாததினால் தான் பலவித குடல் சார்ந்த வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
பழைய சோறு மூலம் கிடைக்கப்பெறும் பாக்டீரியாக்கள் மூலம் பலரது குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குடல் சார்ந்த நோய் மட்டுமல்லாமல், தற்கால மனிதர்களை ஆட்டிப்படைத்து வரும் நீரிழிவு நோய்க்கும் பழைய சோறு அருமருந்தாகச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழைய சோறில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாவால் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு அதிகரித்திருப்பதையும் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைக்கு, அரசு 2.7 கோடி நிதி ஒதுக்கி, பழைய சோறில், மேலும் நன்மை பயக்கும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்து ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல maldi-tof என்ற இயந்திரமும் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.