“2556 தெற்கு ரயில்வே பணியிடங்களுக்கு தேர்வான தமிழர்கள் வெறும் 139 பேர் மட்டுமே!” மத்திய அமைச்சர் தகவல்!

தெற்கு ரயில்வே டெக்னீசியன் பணி நியமனம் பெற்றவர்களில் 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் என்று ரயில்வே டெக்னீசியன் பணி நியமனம் தொடர்பாக தமிழக எம்.பி.வெங்கடேசன் கேட்ட கேள்விக்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பதில் அளித்துள்ளார்.
தென்னக ரயில்வே துறை வேலைவாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில், தென்னக ரயில்வேயின் சரக்கு வண்டிகளின் பாதுகாவலர் பணியிடங்களுக்கு துறைசார்ந்த தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில், தென்னக ரயில்வேயில் பணிபுரிந்துவரும் சுமார் 5,000 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 3,000 பேர் தமிழர்கள்.
96 பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்தத் தேர்வில், வெற்றி பெற்றவர்களில் 5 பேர் மட்டுமே தமிழர்கள். மீதம் உள்ள 91 நபர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி. இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், தங்களது எதிர்ப்பை அறிக்கைகளாகப் பதிவு செய்துவருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி காலை மாநிலங்களவையும், மதியம் லோக்சபாவும் கூடி நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.வெங்கடேசன் ராஜ்யசபாவில் ரயில்வே டெக்னீசியன் பணி நியமனம் தொடர்பாக எழுப்பினார்.
இந்த கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் அவர்களின் பதில் பின்வருமாறு, “தெற்கு ரயில்வே டெக்னீசியன் பணி நியமனம் பெற்றவர்களில் 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள். மொத்தமுள்ள 2,556 பணியிடங்களில் 1,686 இடங்களை இந்தியில் தேர்வு எழுதியவர்கள் பெற்றுள்ளனர். தமிழில் தேர்வு எழுதியவர்களில் 139 பேர் தான் ரயில்வே டெக்னீசியன் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்த பணியிடங்களில் 5.4% பணிகளே தமிழில் தேர்வு எழுதியவர்களை கிடைத்துள்ளது.” என்றார்.