சென்னை – போர்ட் பிளேர் இடையே கடல்வழிக் கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்!

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அதிவிரைவு பிராட்பேண்ட் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை போர்ட் பிளேர், போர்ட் பிளேர் – இதர தீவுகள் ஆகியவற்றுக்கிடையே ஏறத்தாழ 2300 கிலோமீட்டர் தொலைவிற்கு கடலுக்கடியிலான கேபிள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கும் போர்ட் பிளேருக்கும் இடையே கடல்வழிக் கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை (ஓ.எஃப்.சி)இன்று காணொளி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்து நாட்டுக்கு அர்பணித்துள்ளார்.

போர்ட் பிளேருக்கும் சுவராஜ் த்வீப் (ஹாவ் லாக்), லிட்டில் அந்தமான், கார் நிக்கோபார், கமோர்த்தா, கிரேட் நிக்கோபார், லாங் தீவு, ரங்கட், ஆகிய இடங்களுக்குமிடையே கடல் வழி கேபிள் இணைப்பு செயல்படும். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிடைக்கப் பெறும் அலைபேசி, தொலைபேசி சேவைகளைப் போல அதே அளவில் விரைவாகவும், உத்தரவாதம் உள்ள அலைபேசி, தொலைபேசி சேவைகளைப் பெற இயலும்.

இந்தத் திட்டத்திற்கு போர்ட் பிளேரில் 30 டிசம்பர் 2018 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டினார். சேவை துவக்கி வைக்கப்பட்ட பிறகு, சென்னைக்கும் போர்ட் பிளேருக்கும் இடையே வினாடிக்கு 2 x 200 ஜிகா பைட் பேண்ட்வித் கிடைக்கும் போர்ட் பிளேருக்கும், இதரத் தீவுகளுக்கும் இடையே வினாடிக்கு 2×100 ஜிகாபைட் பேண்ட்வித் கிடைக்கும்.
உத்தரவாதமான, வலுவான, அதிவிரைவு தொலைபேசி பிராட்பேண்ட் வசதிகள் இந்தத் தீவுகளில் கிடைக்கப் பெறுவது நுகர்வோர் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமல்லாமல், கொள்கை அளவிலும் கணினி வழி அரசாண்மைக்கும் உதவக்கூடிய மிகப்பெரிய சாதனையாகும்.

4ஜி அலைபேசி சேவைகளுக்கு செயற்கைக்கோள் மூலமாக அளிக்கப்பட்டு வந்த வரையறுக்கப்பட்ட பாக் ஹால் பேண்ட்வித் சேவையிலும் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும். மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தகவல் தொடர்புத்துறையின் கீழ் யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் நிதியம் என்ற நிதியத்தின் மூலமாக மத்திய அரசு உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) செயல்படுத்தியது. டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (டிசிஎல்ஐ) என்ற நிறுவனம் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தது. சுமார் 2300 கிலோ மீட்டர் அளவிலான கடல்வழிக் கண்ணாடியிழைக் கேபிள் சுமார் ஆயிரத்து 224 கோடி ரூபாய் செலவில் பதிக்கப்பட்டுள்ளது.